புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் பேசியதாகக் கூறி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை பாஜ கடுமையாக விமர்சித்துள்ளது. ராகுல் “விரக்தியில்” இருப்பதாகவும், அவரது பேச்சுக்கு கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் நடைபெற்ற பேரணியில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ராகுல் “துரோகிகள்” என்று குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாஜ தரப்பில் கடும் எதிர்வினைகள் எழுந்தன.

நிதின் நபின் அளித்த பேட்டியில், ராகுலின் பேச்சு “மிகவும் துரதிர்ஷ்டவசமானது” என்றும், அது அவரது “அராஜக மனப்பான்மையை” வெளிப்படுத்துவதாகவும் கூறினார். தொடர்ந்து ஏற்பட்ட தேர்தல் தோல்விகளால் ஏற்பட்ட விரக்தியே இத்தகைய கருத்துகளுக்கு காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், நக்சலியத்தை ஒழிப்பது, நாட்டின் எல்லைகளை பாதுகாப்பது, இந்திய மூவர்ணக் கொடியின் உலகளாவிய பெருமையை உயர்த்துவது ஆகியவை தேசத்துரோகச் செயல்களா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையில் பாஜ செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா, பிரதமரை அவமதிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் ராகுலின் வளர்ப்பை பிரதிபலிப்பதாக கூறினார். பிரதமர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதாலேயே காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து இழிவுபடுத்துவதாகவும், “துரோகம்” குறித்து பேசுவதற்கு முன் ராகுல் தனது குடும்பத்தை முதலில் பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.