ஜன் சூராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர், பீஹார் சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நீண்ட நாட்களாக இருந்த விரக்தி காரணமாக பாட்னா புறநகரில் உள்ள ஒரு ஆசிரமத்துக்கு குடிபெயர்ந்ததாக கூறினார்.
இந்த தேர்தலில் ஜன் சூராஜ் 238 இடங்களில் போட்டியிட்டும் ஒரு இடம் கூட வெல்லவில்லை. இதனால் கட்சியினருக்கு ஏமாற்றம் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து தாம் ஆசிரமத்தில் தங்க முடிவு செய்ததாகவும் அவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
அடுத்த பீஹார் சட்டசபை தேர்தல் வரையிலும் கட்சியின் அரசியல் செயல்பாடுகளை அங்கிருந்தே வழிநடத்துவேன் என்றும், வரும் தேர்தலில் ஜன் சூராஜ் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் பிரசாந்த் கிஷோர் கூறினார்.
மேலும், தேர்தலுக்குப் பிறகு முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பொருளாதார நெருக்கடியால் ஏற்படும் இடப்பெயர்வை தடுக்கவில்லை என்றும், அதற்குப் பதிலாக தனது மகனுக்கு பதவி வாங்கி கொடுத்ததாகவும் அவர் விமர்சித்தார். வாக்காளர்கள் ஜாதி, மதம், பணம் ஆகியவற்றின் அடிப்படையில் அல்லாமல் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என்றும், மோடி, நிதிஷ்குமார், லாலு பிரசாத் போன்ற தலைவர்களால் திசைதிருப்பப்படக் கூடாது என்றும் அவர் கூறினார்.
பீஹார் நாட்டின் ஏழ்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்தும் அரசு செலவினங்கள் அதிகமாக இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார். முதல்வர் பெரிய குடியிருப்பு வளாகத்தில் வசிப்பதாகவும், துணை முதல்வர் ஆக்கிரமித்துள்ள பங்களாவை இணைத்து வளாகத்தை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக கேள்விப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.





