புதுடில்லி: இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நடைபெறும் ஊடுருவல் பெரிய சவால் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதனால் மக்கள்தொகை அமைப்பில் “இயற்கைக்கு மாறான” மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வெளியிட்ட அறிக்கையில், ஊடுருவலும் அசாதாரண மக்கள்தொகை மாற்றத்தை உருவாக்கும் காரணங்களும் நாட்டின் நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் முக்கிய சவால்களாக உள்ளன என அமித்ஷா குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று மக்கள்தொகை மாற்றம் குறித்து ஆய்வு செய்ய உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். அதன்படி தற்போது மத்திய அரசு அந்தக் குழுவை அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஓய்வு பெற்ற நீதிபதி பிரகாஷ் பிரபாகர் நவுலேகர் தலைமையிலான குழுவில், மக்கள் தொகை கணக்கெடுப்பு கமிஷனர், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி துர்கா சங்கர் மிஸ்ரா, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பாலாஜி ஸ்ரீவஸ்தவா மற்றும் டாக்டர் ஷாமிகா ரவி ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் உறுப்பினர்-செயலாளராக பணியாற்றுவார்.
மக்கள்தொகை மாற்றம் என்பது இறையாண்மை மட்டுமல்ல; தேசியப் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு, சமூகக் கட்டமைப்பில் ஆழமான மாற்றங்கள் மற்றும் பழங்குடியின சமூகங்களைப் பாதுகாப்பது போன்ற அம்சங்களுடனும் தொடர்புடைய தீவிர பிரச்சினை என அமித்ஷா கூறினார். சட்டவிரோதக் குடியேற்றம் மற்றும் பிற இயற்கைக்கு மாறான காரணங்களால் இந்தியா முழுவதும் ஏற்படும் மக்கள்தொகை மாற்றங்களை குழு விரிவாக ஆய்வு செய்து, மத மற்றும் சமூக மட்டங்களில் நிகழும் அசாதாரண இடப்பெயர்வுகளின் வடிவங்களைப் பகுப்பாய்வு செய்து, தீர்வுகளை முன்வைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.





