சென்னை: ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்காக தாம் முயற்சி செய்கிறதாக வெளியான தகவல்களை, முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மறுத்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு ராஜ்யசபா இடத்தை காங்கிரஸ் எதிர்பார்க்கிறது என்ற பின்னணியில், அந்த இடத்தை பெற தங்கபாலு உள்ளிட்டோர் முயற்சித்து வருவதாக செய்திகள் வெளியாகின.

இதற்கு பதிலளித்த தங்கபாலு, தனது அரசியல் பயணம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிப்பதாகவும், தனது உழைப்புக்கு ஏற்கனவே பல்வேறு பொறுப்புகள் மூலம் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் கூறினார்.

இளைஞர் காங்கிரஸ் முதல் மாநில தலைவர், லோக்சபா எம்.பி., ராஜ்யசபா எம்.பி., மத்திய அமைச்சர் வரை பல பதவிகளை வகித்ததாக அவர் குறிப்பிட்டார். சட்டசபை தேர்தலிலும் தமக்கோ, தனது மகனுக்கோ சீட் கேட்கவில்லை என்றும், ராஜ்யசபா சீட் கேட்டு டெல்லியில் யாரையும் சந்தித்து பேசவில்லை என்றும் தெரிவித்தார்.