கர்நாடகாவின் புதிய முதல்வராக டி.கே. சிவகுமார் ஜூன் 3ம் தேதி பதவியேற்க உள்ளதாக கர்நாடக மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ஜி.சி. சந்திரசேகர் தெரிவித்தார்.

மாநிலத்தில் காங்கிரசுக்குள் ஏற்பட்ட அதிகார மோதல் முடிவுக்கு வந்ததாக கூறப்படும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்; மேலும் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவராக சிவகுமார் முறைப்படி தேர்வு செய்யப்படுகிறார்.

சந்திரசேகர் கூறுகையில், பதவியேற்பு விழா பெங்களூருவில் உள்ள லோக்பவனில் நடைபெறும் என்றார். பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் நோக்கிலேயே இடத் தேர்வு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

விழா நடைபெறும் இடத்திற்கு நேரில் வருவதை தவிர்க்குமாறு கட்சித் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், எந்த அனுமதிச் சீட்டுகளும் வழங்கப்படாது என்றும் கூறினார். சட்டமன்ற உறுப்பினர்களுக்காக மட்டும் சில அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டுள்ள நிலையில், விழாவை மிக எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பின்னர் மாவட்டங்கள் தோறும் நேரில் சென்று கட்சித் தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்தித்து நன்றி தெரிவிப்பார் என்றும் சந்திரசேகர் கூறினார்.