லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை கண்டித்து, அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. இஸ்ரேலின் தொடர்ச்சியான ராணுவ நடவடிக்கைகளால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.

லெபனானில் நிலைமை இன்னும் பதற்றமாகவே நீடிக்கிறது. பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகள் மீது புதிய தாக்குதல்களை நடத்த இஸ்ரேல் அரசு உத்தரவிட்டதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து, பிராந்திய அளவில் பதற்றம் மேலும் கூடியது; இதன் பின்னணியில் தான் பேச்சுவார்த்தையை ஈரான் நிறுத்திவைத்ததாக தெரிவித்தது.

இதற்கிடையே, ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் அடுத்த வாரமே எட்டப்படும் வாய்ப்பு இருப்பதாகவும், பேச்சுவார்த்தை வேகமாக தொடர்வதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.

லெபனானில் நடைபெறும் குண்டுவீச்சு தொடர்பாக டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசியதாகவும் தெரிவித்தார். பெய்ரூட் மீது பெரிய தாக்குதல் நடத்த வேண்டாம் என்று அவர் வலியுறுத்தியதாகவும், இஸ்ரேல் படைகள் லெபனானில் இருந்து திரும்பப் பெற்றதாகவும் டிரம்ப் கூறினார்.

மேலும், ஹிஸ்புல்லா தலைவர்களின் பிரதிநிதிகளுடனும் பேசியதாக டிரம்ப் தெரிவித்தார். அவர்கள் இஸ்ரேல் மற்றும் அதன் வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை நிறுத்த ஒப்புக்கொண்டதாகவும், அதேபோல் இஸ்ரேலும் துப்பாக்கிச் சூட்டை நிறுத்த ஒப்புக்கொண்டதாகவும் கூறினார். இந்த புரிந்துணர்வு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது பார்க்க வேண்டியதாக இருந்தாலும், நீடிக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.