சென்னை: விதிமீறல் புகார்களைத் தொடர்ந்து, தமிழக கனிமவளத்துறை அதிகாரிகள் ஐந்து மாவட்டங்களில் 28 நிறுவனங்களுடன் தொடர்புடைய குவாரிகளில் ஆய்வுகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கருங்கல் குவாரிகளில் விதிமீறல்கள் நடைபெறுவதாக புகார்கள் அதிகரித்ததை அடுத்து, குவாரிகளை ஆய்வு செய்து மீறல்கள் குறித்து அறிக்கை அளிக்க கடந்த வாரம் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் பிரபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை மாவட்டங்களில் அமைச்சர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 155 குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல மாவட்டங்களில் சோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 28 நிறுவனங்களுக்கு தொடர்புடைய 125க்கும் மேற்பட்ட குவாரிகளில் தற்போது ஆய்வு நடைபெற்று வருவதாக தெரிவித்தார். அனுமதிக்கப்பட்ட காலத்தை கடந்தும் செயல்படும் குவாரிகளை உடனடியாக மூடவும், அனுமதிக்கு மாறாக அதிக அளவு கருங்கல் எடுக்கப்பட்ட இடங்களை சீல் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார்.
கடந்த சில நாட்களாக இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதன் விவரங்கள் அறிக்கையாக அரசுக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.





