புதுடில்லி: சிபிஎஸ்இ தேர்வு மதிப்பீட்டு நடைமுறையில் ஏற்பட்டதாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. குறைபாடுகளை கண்டறிய ஒருநபர் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள்கள் மதிப்பீட்டிற்காக டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டன. முடிவுகள் வெளியான பின்னர், மறுமதிப்பீடு மற்றும் மதிப்பெண் சரிபார்ப்புக்காக ‘ஓஎஸ்எம்’ (திரைவழி மதிப்பீடு) முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நடைமுறையில் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர். விடைத்தாள் தெளிவாக தெரியவில்லை, சில பதில்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இதை சிபிஎஸ்இ ஒப்புக்கொண்டு, தொழில்நுட்பத்தை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
இதனிடையே, விவகாரம் தொடர்பாக கல்வி அமைச்சகம் சிபிஎஸ்இயிடம் விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, சிபிஎஸ்இ தலைவர் ராகுல் சிங் மற்றும் செயலாளர் ஹிமான்சு குப்தா ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி லோகாண்டே பிரசாந்த் சீதாராம் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய செயலாளராக வருண் பரத்வாஜ் நியமனம் பெற்றுள்ளார். மேலும், ராகுல் சவுஹான் தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் குழு விசாரணை நடத்தி ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





