சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் பின்பற்றப்பட்ட முறையைப் போல, தற்போதைய தமிழக அமைச்சர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்த ஆளும் தவெக தலைமை முடிவு செய்துள்ளதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அவர்கள் கூறுகையில், “சில வியூக காரணங்களால்” முதல்வர் விஜய் இன்னும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்காமல் இருப்பதாகவும், ஆனால் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஊடகங்களுக்கு பேசுவதில் தலைமையிலிருந்து தடையில்லை என்றும் தெரிவித்தனர். இருப்பினும், சில அமைச்சர்கள் துறை சார்ந்த தகவல்களே தெரியாமல் பேட்டி அளிப்பதால் சமூக வலைதளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருவதாகவும் கூறினர்.

துறை அனுபவம் குறைவால் ஆய்வு கூட்டங்களிலும் பலர் திணறுவதாக கூறப்படும் நிலையில், இதை சரி செய்ய துறை வல்லுநர்கள் மூலம் அமைச்சர்களுக்கு துறை சார்ந்த தகவல்களை விளக்கி, அரசின் திட்டங்களை மக்களிடம் எவ்வாறு கொண்டு சேர்ப்பது என்பதற்கான பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இந்த பயிற்சி வகுப்பு வாரத்தில் இரு நாட்கள் நடைபெறும் என கூறப்படுகிறது. மேலும், செய்தியாளர் சந்திப்புகளில் துறை சார்ந்த கேள்விகளைத் தவிர பொதுக் கேள்விகள் மற்றும் அரசியல் கேள்விகளுக்கு பதிலளிக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதை மீறி அமைச்சர்கள் செயல்படக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.