வாஷிங்டன்: அதிபர் டிரம்பிற்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வந்த சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், இம்மாத இறுதியில் வெள்ளை மாளிகையில் வகித்து வரும் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், சிறிது இடைவேளைக்குப் பிறகு அமெரிக்கா ஏஐ துறையில் எதிர்கொள்ளும் சில முக்கிய சவால்களை சமாளிக்க உதவும் பணிகளில் ஈடுபட உள்ளதாகவும், அமெரிக்க மக்களுக்குச் சேவை செய்தது பெரும் பாக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், டிரம்பின் தலைமையின் கீழ் பணியாற்றியது தமக்கு கிடைத்த கவுரவம் எனக் கூறிய அவர், ஏஐ துறையில் நிலவும் போட்டியில் அமெரிக்கா முன்னணியில் இருக்க அவரது தலைமையே காரணம் எனவும் குறிப்பிட்டார். தன்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
ஸ்ரீராம் கிருஷ்ணன் சென்னையில் பிறந்து, காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் முடித்தவர். 21 வயதில் மைக்ரோசாப்டில் பணியைத் தொடங்கி, பின்னர் பேஸ்புக், யாகூ, ஸ்னாப்சாட் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
கடந்த 18 மாதங்களாக டிரம்ப் நிர்வாகத்தில் பணியாற்றிய அவர், அமெரிக்காவின் தேசிய ஏஐ கொள்கை மற்றும் அமெரிக்க ஏஐ செயல் திட்டம் ஆகியவற்றை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்ததாக செய்தி தெரிவிக்கிறது.





