சென்னை: பொதுமக்கள் இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் சில வகை பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை இணைய வழியில் பதிவு செய்யும் வகையில் தமிழக அரசு சனிக்கிழமை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

பத்திரப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் “வருகை இல்லா ஆவணப்பதிவு” திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக பதிவுத்துறை தெரிவித்தது. இதன் மூலம் எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் பதிவுத்துறை இணையதளம் வழியாக ஆவணங்களை சமர்ப்பித்து பதிவு செய்ய முடியும்.

சார் பதிவாளர் ஒப்புதல் அளித்ததும், அவரது மின்னணு கையொப்பத்துடன் பதிவு செய்யப்பட்ட ஆவணம் சம்பந்தப்பட்ட நபரின் வாட்ஸ் அப்புக்கு அனுப்பப்படும்; அதை பதிவாளர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

“Anywhere Registration” நடைமுறை விரைவில் கட்டாயமாக்கப்படலாம் என்பதைக் கருத்தில் கொண்டு இந்நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பதிவுத்துறை குறிப்பிட்டுள்ளது.

தற்போது அலுவலகம் வராமலே பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள ஆவணங்களில் முதல் விற்பனை மனை, முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய விற்பனை ஆவணங்கள், வங்கிக் கடனுக்கான அடமானம் மற்றும் ரசீது ஆவணங்கள் ஆகியவை இடம்பெறுகின்றன. விண்ணப்பதாரர்கள் பதிவுத்துறை இணையதளத்தில் தங்களுக்கான உள்நுழைவை உருவாக்கி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர்கள், எழுதிப் பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் அனைவரின் ஆதார் அட்டையும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்; கைரேகை அல்லது கருவிழி படலம் மூலம் ஆதார் சரிபார்ப்பும் அவசியம். சந்தேகங்களுக்கு 7397574067, 9940446694, 6369798973, 8525805957 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.