அரசு வழக்கறிஞர்கள் நியமனங்களில் அரசியல் தலையீட்டைத் தடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களுக்கான அரசு வழக்கறிஞர் நியமனங்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஆளுங்கட்சியின் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் சில நீதிமன்றங்களுக்கு யார் யார் நியமிக்கப்பட வேண்டும் என்ற பட்டியல் வெளியிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

இந்தச் சூழலில், நியமனங்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும், அரசியல் செல்வாக்கு இன்றி தகுதியான வழக்கறிஞர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்றும் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதி ராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குடன் இணைத்து இதையும் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.