கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மேலும் ஒரு பின்னடைவாக, திரிணமுல் காங். (டி.எம்.சி.) கட்சியைச் சேர்ந்த 20 லோக்சபா எம்.பி.க்கள், பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (தே.ஜ.) அரசுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
கட்சியின் பாராளுமன்றக் குழு கொறடா ககோலி கோஷ் தஸ்திதார் தலைமையில் ஒன்றிணைந்த இந்த எம்.பி.க்கள், தங்கள் முடிவை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதமாக அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், திரிணமுல் கட்சிக்குள் நீண்ட நாட்களாக நீடித்த உட்கட்சி பூசல் மேலும் உச்சத்தை எட்டியுள்ளது.
இந்த அரசியல் குழப்பம், மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணமுல் தோல்வியடைந்து, பா.ஜ. முதல் முறையாக ஆட்சியைப் பிடித்ததற்குப் பிறகு தீவிரமடைந்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் மம்தா பானர்ஜியின் 15 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது; முன்னர் மம்தாவின் நெருங்கியவராக கருதப்பட்ட சுவேந்து அதிகாரி, மாநிலத்தின் முதல் பா.ஜ. முதல்வராக பதவியேற்றார்.
தோல்விக்குப் பின் கட்சிக்குள் அபிஷேக் பானர்ஜி மீது விமர்சனங்கள் அதிகரித்தன; அவர் கட்சியை கட்டுப்பாட்டில் வைத்திருக்க சர்வாதிகார போக்கில் நடக்கிறார் என சில எம்.எல்.ஏ.க்கள் குற்றஞ்சாட்டினர். சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான தேர்விலும் கருத்து வேறுபாடு உருவான நிலையில், எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்த அபிஷேக் பானர்ஜியின் அதிகாரத்தை குறைக்க மம்தா முடிவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
லோக்சபாவில் திரிணமுல் கட்சிக்கு 28 எம்.பி.க்கள் உள்ள நிலையில், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் பதவி பறிபோகாமல் இருக்க தேவையான ஆதரவு எண்ணிக்கை தங்களிடம் இருப்பதாக அதிருப்தி முகாம் நம்புகிறது. தற்போதைக்கு கட்சியை விட்டு விலகவோ அல்லது பா.ஜ.வில் சேரவோ முடிவு எடுக்காமல், லோக்சபாவில் தனிப்பிரிவாக செயல்பட்டு தே.ஜ. கூட்டணிக்கு ஆதரவு அளிக்க தீர்மானித்துள்ளனர். இதே நேரத்தில், பா.ஜ.க்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க டில்லியில் நடந்த ‘இண்டி’ கூட்டணி கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்றிருந்தது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.





