பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “பயங்கரவாதத்தை வளர்க்கும் ஆதரவாளர்களுக்கு சிந்து நதி நீர் கிடைக்கக் கூடாது” என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாக கூறினார்.

தெலுங்கானா பாஜ சார்பில் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தியதாகவும், இதன் மூலம் “பயங்கரவாதத்தை தண்ணீர் ஊற்றி வளர்ப்பவர்கள் எங்களிடமிருந்து தண்ணீரை எதிர்பார்க்கக் கூடாது” என்ற தெளிவான செய்தி அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களுக்கும் “மனிதகுலத்தின் எதிரிகளுக்கும்” சிந்து நீர் சென்றடைய விடமாட்டோம் என்றும் அவர் கூறினார்.

அதே உரையில், கடந்த 12 ஆண்டுகளான பாஜ ஆட்சியில் சட்டப்பிரிவு 370 ரத்து, நாட்டை பெருமளவில் நக்சல் இல்லாத நிலைக்கு கொண்டு செல்லும் முன்னேற்றம், ஜிஎஸ்டி அமலாக்கம், நாடு தழுவிய மின்மயமாக்கல் மற்றும் நீதித்துறையில் சீர்திருத்தங்கள் ஆகியவற்றை அவர் பட்டியலிட்டார்.

காஷ்மீர் குறித்து பேசுகையில், ஒரு காலத்தில் பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட அந்த பகுதி தற்போது சுற்றுலா, முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளில் வளர்ச்சி காண்பதாகவும் கூறினார். மேலும், “சமாதான மொழியைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு எப்படி பதிலடி கொடுக்க வேண்டும்” என்பதை ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ உலகிற்கு காட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.