சென்னை: கவர்னர் உரை ‘ரீல்ஸ் கன்டென்ட் மெட்டீரியல்’ போல உள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி புதன்கிழமை விமர்சித்தார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து தெளிவான அறிவிப்புகள் இல்லை என்றும் அவர் கூறினார்.

திமுக ஆட்சிக்காலத்தில் இருந்த திட்டங்கள், கோரிக்கைகளையே தற்போதைய அரசு ‘காப்பி-பேஸ்ட்’ செய்து முன்வைக்கிறது என குற்றம்சாட்டிய அவர், உரையில் முரண்பாடுகள் அதிகம்; தமிழக வளர்ச்சிக்கான புதிய திசை காட்டும் அம்சங்கள் இல்லை என்றார்.

தேர்தல் பிரசாரத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் பேசியதை நினைவூட்டிய உதயநிதி, தற்போதைய நிலை அந்த பேச்சுகளுக்கு ஒத்துப்போகவில்லை எனவும் விமர்சனம் செய்தார்.

மேலும், அரசு அமைந்த நாளிலிருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை முதல்வர் ‘பேனிக் பையிங்’ செய்வதாக அவர் கூறினார். முந்தைய அரசின் திட்டங்களை முடக்கினால் சும்மா இருக்க மாட்டோம் என்றும் எச்சரித்தார்.

திமுக ஆட்சியில் அரசு உரைகளை கவர்னர் முழுமையாக வாசிக்காமல் பல திருத்தங்கள் செய்வார்; ஆனால் இப்போது தற்போதைய அரசு தயாரித்த உரையை ஒரு வரியும் மாற்றாமல் வாசித்துள்ளார் என உதயநிதி குறிப்பிட்டார். இதனால் ஆளும் தரப்புக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கம் உள்ளதோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.