இந்தியாவில் குடும்ப தலைமையைக் மையமாகக் கொண்ட பல பிராந்திய கட்சிகள், சமீப காலமாக செல்வாக்கை இழந்து பலவீனமடைந்து வருகின்றன. 1990களில் ஜாதி கணக்குகள், பிராந்திய அடையாளம், தனிநபர் செல்வாக்கு ஆகியவற்றை அடித்தளமாக வைத்து உருவான பல கட்சிகள், இப்போது தங்களின் அரசியல் இருப்பைத் தக்கவைக்கப் போராடும் நிலைக்கு வந்துள்ளதாக கட்டுரை கூறுகிறது.
தேசிய அளவில் பா.ஜ.க. ஆதிக்கம் வலுப்பெறும் சூழலில், குடும்ப அரசியலை முன்னிறுத்தும் கட்சிகளுக்கு மூன்று வழிகளே மிஞ்சுகின்றன: பா.ஜ.க.வுடன் இணைந்து தங்களை காப்பாற்றுவது, ‘இண்டியா’ கூட்டணியில் சேருவது, அல்லது தனித்த அடையாளத்தைப் பேண முயல்வது. இதன் விளைவாக தேசிய அரசியல் களம் பா.ஜ.க.–காங்கிரஸ் என்ற இருதுருவப் போட்டியாக மாறும் போக்கும் உருவாகி வருவதாக குறிப்பிடப்படுகிறது.
2014ல் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, வாரிசு அரசியலை கடுமையாக விமர்சித்து வந்தார்; அது காங்கிரசை மட்டுமல்லாமல், மாநிலங்களில் குடும்ப ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ள பிராந்திய தலைவர்களையும் குறிவைப்பதாக கட்டுரை சுட்டுகிறது. 1990களில் காங்கிரஸ் ஆதிக்கம் தளர்ந்து, ஜனதா அரசியல் ஓட்டம் சிதறியபோது உருவான இடைவெளியில், பிராந்திய கட்சிகள் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தேசிய அரசியலின் போக்கை தீர்மானித்தன என்றும் கூறப்படுகிறது.
உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி தற்போது அகிலேஷ் யாதவின் தலைமையையே பெரிதும் சார்ந்துள்ளதாகவும், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் கட்சிக்கு முக்கியமானதாகவும் குறிப்பிடப்படுகிறது. பீஹாரில் ஐக்கிய ஜனதா தளம் இன்னும் ஓரளவு செல்வாக்குடன் இருந்தாலும், பா.ஜ.க. முதல்வர் பதவியை கோரும் அளவுக்கு அது பலவீனமடைந்துள்ளதாகவும்; ராஷ்ட்ரீய ஜனதா தளத்திற்கு ஊழல் குற்றச்சாட்டுகள் அரசியல் எதிர்காலத்தை பாதிப்பதாகவும் கட்டுரை கூறுகிறது.
ஒடிஷாவில் நீண்ட காலம் வெற்றிகரமாக இயங்கிய பிஜு ஜனதா தளம் 2024 சட்டசபை தேர்தலில் கடும் தோல்வியை சந்தித்ததாகவும், கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தற்போது பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஓர் அங்கமாக மாறியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் உட்கட்சி பூசலை எதிர்கொள்வதாகவும், மஹாராஷ்டிராவில் 2023ல் தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுபட்டதாகவும் கட்டுரை எடுத்துக்காட்டுகிறது.





