அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளின் மொபைல் எண்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டதையடுத்து, தினமும் ஏராளமான அழைப்புகள் குவிந்ததால், புதிய மொபைல் எண்களை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் இருந்து பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
முதல்வர் விஜய் அரசு நிர்வாகம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என உத்தரவிட்டதன் ஒரு பகுதியாக, அமைச்சர்கள், அவர்களின் உதவியாளர்கள் மற்றும் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தொடர்ந்து வரும் அழைப்புகள் காரணமாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஒருவருக்கொருவர் அவசரமாக தொடர்பு கொள்ளும் பணியில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தவிர்க்க, துறை வாரியாக உள் வட்டார தொடர்புக்கென தனி எண்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல். உயர் அதிகாரிகள், புதிய சிம் கார்டுகள் அனைத்தும் CUG (Closed User Group) முறையில் வழங்கப்படுவதாக தெரிவித்தனர்.
இந்த எண்கள் பொதுவெளியிலோ அரசு இணையதளங்களிலோ எக்காரணம் கொண்டும் வெளியிடப்படாது என்றும், முழுமையாக உள் நிர்வாக பயன்பாட்டிற்கே ஒதுக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.





