சொந்த நாட்டில் ஏற்பட்ட தோல்விகளையும் மனித உரிமை மீறல்களையும் மறைக்க, பாகிஸ்தான் ஆத்திரமூட்டும் பேச்சுகளை மேற்கொள்கிறது என இந்தியா திங்களன்று கடுமையாக கண்டனம் தெரிவித்தது.
காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்ததாகவும், அதை மறுபரிசீலனை செய்ய பாகிஸ்தான் கோரிய போதும் இந்தியா மறுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னணியில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிப், குடிநீருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக நினைத்தால் இந்தியாவுடன் போருக்கு செல்வோம் என பாகிஸ்தான் ஊடகத்திடம் கூறினார்.
இதற்கு பதிலளித்த மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால், ஆசிப் கூறியவை பாகிஸ்தானின் சொந்த தோல்விகளை மறைக்கவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான விவகாரங்களில் இருந்து கவனம் திசைதிருப்பவும் மேற்கொள்ளப்படும் அவநம்பிக்கையான முயற்சிகள் என கூறினார். அந்த கருத்துகளை இந்தியா கண்டித்து நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடக்கும் நிகழ்வுகள், பல தசாப்தங்களாக பாகிஸ்தான் பின்பற்றும் திட்டமிட்ட பொருளாதார சுரண்டல், அடிப்படை உரிமைகள் மறுப்பு மற்றும் நிர்வாக ஒடுக்குமுறை கொள்கைகளின் நேரடி விளைவுகள் என அவர் குற்றம்சாட்டினார். அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துகளை தடுத்தல், இணையதள முடக்கம், பொதுமக்களுக்கு எதிராக ஆயுதப் பயன்படுத்தல் உள்ளிட்ட கடுமையான போலீஸ் சட்டங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் கூறினார்.
இதனால் பல அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்ட இந்தியா, பாகிஸ்தானின் தவறான நடத்தை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு சர்வதேச சமூகம் அந்த நாட்டை பொறுப்பேற்க வைக்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தியது.





