மோடி தலைமையிலான அரசு அரசியலமைப்பை முழுமையாக நிலைநிறுத்தவும், இந்தியாவின் ஜனநாயக நிறுவனங்களை மேலும் வலுப்படுத்தவும் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

1975-ஆம் ஆண்டு அவசரநிலை அமல்படுத்தப்பட்ட நினைவு நாளான இன்று வெளியிட்ட அறிக்கையில், அந்த காலகட்டத்தை இந்திய ஜனநாயக வரலாற்றின் மிக இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாக அவர் குறிப்பிட்டார். அப்போது பேச்சு மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் பறிக்கப்பட்டதாகவும், நீதித்துறையை கட்டுப்படுத்தி அதன் அதிகாரத்தை குறைக்கும் முயற்சிகள் நடந்ததாகவும் கூறினார்.

மேலும், அதிகாரத்தில் இருப்பவர்கள் சர்வாதிகாரப் போக்கை கடைபிடிக்கும் போது பொதுமக்களின் வாழ்க்கை, ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு மதிப்புகள் ஆகியவற்றுக்கு கடுமையான அச்சுறுத்தல் உருவாகும் என்பதை அவசரநிலை நினைவூட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அவசரநிலையின் அநீதிகளுக்கும் அத்துமீறல்களுக்கும் எதிராக நின்று, ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் தைரியமாகக் காத்த அனைவருக்கும் நாடு எப்போதும் கடமைப்பட்டிருக்கும் என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.