காசாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக பாஜ தலைமையிலான மத்திய அரசு “மவுனமாகவும், செயலற்றதாகவும்” இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் எழுதிய கட்டுரையில், இந்த மோதலுக்கு இந்தியா அளித்த பதில் தார்மீக பொறுப்புக்கும் நாட்டின் தேசிய நலனுக்கும் முரணானது எனக் குறிப்பிட்டார்.
காசாவில் குழந்தைகள் பாதிக்கப்படுவது தற்செயலானது அல்ல; அது திட்டமிட்ட உத்தி என அவர் கூறினார். பள்ளிகள் மற்றும் சுகாதார உள்கட்டமைப்புகள் அழிக்கப்படுவதால் மனிதாபிமான நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளதாகவும் அவர் எழுதினார்.
2023 அக்டோபர் 7-ல் ஹமாஸ் நடத்திய தாக்குதல் கோழைத்தனமானதும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாததுமானது என்றாலும், அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவத்தின் பதில் நடவடிக்கை அத்துமீறிய கொடுமை மற்றும் காட்டுமிராண்டித்தனம் நிறைந்ததாக இருந்ததாக அவர் விமர்சித்தார். மேலும், காசாவை முழுமையாக முற்றுகையிடவும் முற்றிலும் அழிக்கவும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் மூத்த அமைச்சர்கள் விடுத்த அழைப்புகள் இனப்படுகொலை நோக்கத்தை பிரதிபலிப்பதாகவும் அவர் கூறினார்.
பல நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ள நிலையில், மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச அமைப்புகள் ஆவணப்படுத்தியுள்ளதாகவும், காசா நிலைமை குறித்து உலகளவில் கவலை அதிகரித்த போதிலும் இந்தியா தனி “மவுன குரலாக” நீடிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். காலனித்துவத்திற்குப் பிறகு இந்தியா ஒற்றுமை, தேசிய இறையாண்மை, சர்வதேச அமைதி ஆகியவற்றுக்காக நின்ற வரலாற்றுப் பின்னணியைக் குறிப்பிட்டு, பாலஸ்தீனியர்களின் துன்பங்கள் தொடர்பான மத்திய அரசின் மவுனமும் செயலற்ற தன்மையும் தார்மீக ரீதியாக கண்டிக்கத்தக்கது; தேசிய நலன் கண்ணோட்டத்திலும் விளக்க முடியாதது என அவர் தெரிவித்தார்.
மேலும், பாலஸ்தீனம், ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள நட்பு நாடுகளிடமிருந்து இந்தியா அந்நியப்படுத்திக் கொண்டதாகவும், அந்தப் பிராந்தியத்தில் இந்தியா பெற்றிருந்த ராஜதந்திர இடத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க அனுமதித்ததாகவும் அவர் கூறினார். இதன் விளைவாக இந்தியாவின் நலன்களும் தார்மீக நெறிகளும் தியாகம் செய்யப்பட்டு, பிரதமர் மோடியும் பிரதமர் நெதன்யாகுவும் இடையிலான நட்பு மட்டுமே எஞ்சியதாகவும் அவர் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.





