மியான்மரில் 2021-ல் ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றி, ஆங் சான் சூச்சி தலைமையிலான ஜனநாயகத்துக்கான தேசியக் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்ததிலிருந்து, சூச்சி (80) பொதுமக்கள் பார்வைக்கு அப்பால் வைக்கப்பட்டுள்ளார்.
அதன்பின் ஊழல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் மற்றும் நாட்டின் ரகசியங்களை வெளியிட்டதாகும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சூச்சிக்கு 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் பொது மன்னிப்பு நடைமுறையின் மூலம் தண்டனை முதலில் 27 ஆண்டுகளாகவும், அதன் பின் 18 ஆண்டுகளாகவும் குறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் எந்த இடத்தில் அடைக்கப்பட்டுள்ளார் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
கடந்த மே மாதம் சூச்சியை வீட்டுக் காவலுக்கு மாற்றியதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. இதை சந்தேகத்துடன் பார்க்கும் சூச்சியின் இளைய மகன் கிம் அரிஸ், தன் தாய் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தும் நம்பத்தகுந்த ஆதாரங்களை வெளியிடுமாறு ராணுவ ஆட்சிக்குழுவிடம் கோரியுள்ளார்.
லண்டனில் வசிக்கும் கிம் அரிஸ், தாயின் விடுதலைக்கும் மியான்மரின் அரசியல் கைதிகளுக்குமான சர்வதேச பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார். குடும்பத்துக்கு கிடைக்கும் ஒரே தகவல் அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகவே இருப்பதாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு கடிதமே தாயுடன் தன் கடைசி நேரடி தொடர்பாக இருந்ததாகவும் அவர் கூறினார்; அரசியலில் இருக்க விருப்பமில்லை என்றாலும் இந்த சூழலில் குரல் கொடுக்க வேண்டியதாக இருப்பதாகவும் தெரிவித்தார்.





