சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் (TNCC) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பொறுப்பேற்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். கட்சியை மேலும் வலுப்படுத்த நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை 4 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் உள்ள கட்சி தலைமையகத்தில் அவர் தலைவர் பொறுப்பை ஏற்க உள்ளார். தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்ட வீடியோ பதிவில், “வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலத்தில்” இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக மாணிக்கம் தாகூர் கூறினார். 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸுக்கு இரண்டு அமைச்சர்கள் உள்ளதாகவும், ஆட்சியில் பங்கு பெறுவது என்ற நீண்டநாள் இலக்கு நிறைவேறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த இலக்காக ராகுலை நாட்டின் பிரதமராக்க வேண்டும் என்றும், அதற்காக தமிழகத்திலிருந்து 40 எம்.பிக்கள் வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். வலுவான கூட்டணியுடன் மக்களிடம் செல்வது அவசியம் என வலியுறுத்திய அவர், மாநிலத்தில் “பலமான காங்கிரஸ்” உருவாக தலைவர்கள், தொண்டர்கள் அனைவரின் ஆதரவும் தேவை என கூறி, பொறுப்பேற்பு விழாவில் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டார்.