சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நேற்று மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 400 நிர்வாகிகள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 200க்கும் குறைவான பெண் நிர்வாகிகளே வந்ததால் பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி கடும் ஏமாற்றம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு முறைகேடு குறித்த குற்றச்சாட்டு, மின்வெட்டு உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய பழனிசாமி, கடினமான சூழலிலும் சட்டசபை தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்றதாக கூறினார். கூட்டணி பலத்தால் வெற்றி பெற்ற திமுக தற்போது தனித்து நிற்கிறது என்றும், மின்வெட்டு மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளால் குறுகிய காலத்திலேயே அரசின் மீது மக்கள் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

வரும் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் சிறப்பாக செயல்பட்டால் வெற்றி பெற முடியும் என அவர் தெரிவித்தார். மேலும் ஊரக உள்ளாட்சி தேர்தல், நகராட்சி தேர்தல் மற்றும் அடுத்த பொதுத்தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களில் 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.

கட்சியிலிருந்து துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர் என்றும், அதிமுக ஜனநாயக இயக்கம் என்பதால் கருத்து வேறுபாடுகள் எழலாம்; அவை அனைத்தும் சரியாகிவிடும் என்றும் அவர் கூறினார்.