அமைச்சர் கா.அ. செங்கோட்டையன், “தவெக அரசு தடுமாற நரி போல் சிலர் காத்திருக்கிறார்கள்” என்று கூறியதுடன், தமிழக வெற்றிக்கழக (தவெக) தலைவர் விஜய் “தமிழகத்தின் நிரந்தர முதல்வர்” என்றும் தெரிவித்தார்.
மாமல்லபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுகவினர் தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து அவர் பேசினார். கட்சி மாற்றம் செய்தவர்களை “துரோகிகள்” என விமர்சிப்பவர்களுக்கு பதிலளித்த அவர், துரோகம் எங்கே நடந்தது என்பதைப் பார்க்க வேண்டும் எனக் கூறினார். திமுக ஆதரவுடன் இபிஎஸ் முதல்வராகலாம் என்ற எண்ணத்தால் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தவெக தலைமை மீது நம்பிக்கை வைத்து நாடும் மக்களும் வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் பலர் இணைவதாக செங்கோட்டையன் கூறினார். நல்ல தலைமையைத் தேடி வந்தவர்களை வரவேற்பதாகவும், இங்கே நம்பிக்கையும் நாணயமும் எதிர்காலமும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தவெக அரசு தடுமாறுமா என்று சிலர் காத்திருப்பதாக கூறிய அவர், தவெக அரசை காக்கும் சக்திகளாக தற்போது அதிமுகவினர் இணைந்துள்ளதாகவும் பேசினார். திமுகவுடன் இணைந்து இபிஎஸ் முதல்வராகும் கனவு தகர்த்துவிடப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தன் அரசியல் வாழ்க்கையை நினைவுகூர்ந்த செங்கோட்டையன், அரசியலில் தன்னை ஒதுக்கிய காலத்தில் தன்னைத் தாங்கி பிடித்து வருவாய் துறை அமைச்சராக ஆக்கிய வரலாறு தன் தலைவரைத் தவிர வேறு யாருக்கும் இல்லை எனவும் தெரிவித்தார்.





