ராஜஸ்தான் மாநிலம் பலோத்ராவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களைத் தொடங்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தனது அரசு வெறும் தொடக்க விழாக்களோடு நிற்காமல் திட்டங்கள் முழுமையாக நிறைவேறுவதை உறுதிசெய்ய “இரவு பகலாக” உழைப்பதாக தெரிவித்தார்.
தொழில்நுட்பத்தின் மூலம் ராஜஸ்தானின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் இணைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், கோடைக்காலத்திலும் பெருமளவில் மக்கள் திரண்டிருப்பது பாஜ அரசின் முயற்சிகளின் மீது உள்ள நம்பிக்கையை காட்டுவதாக குறிப்பிட்டார்.
வளர்ச்சியடைந்த மற்றும் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா மாறும் இலக்கில், ராஜஸ்தான் மண்ணிலிருந்து ஒரு முக்கிய முன்னேற்றம் எடுக்கப்பட்டுள்ளதாக மோடி கூறினார். மாநிலத்தின் வீரத்தையும் சுயமரியாதை மரபையும் அவர் நினைவுகூர்ந்தார்.
இன்று ஒரு சுத்திகரிப்பு நிலையம் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டதாகவும், அது ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் ஜோத்பூரில் புதிய விமான நிலைய முனையம் திறக்கப்பட்டதாக கூறிய அவர், அது சுற்றுலா, வர்த்தகம், வேலைவாய்ப்புக்கு புதிய உத்வேகம் அளிக்கும்; சிறிய நகரங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளின் விமான இணைப்பும் மேம்படும் என்றார்.
மேற்கு ஆசியாவில் நடைபெறும் போர் உலகளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி, 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியை உருவாக்கியதாக மோடி கூறினார். இந்தியாவின் மன உறுதியும் முயற்சிகளும் அதன் தாக்கத்தை முறியடிக்க உதவியதாக அவர் தெரிவித்தார். மேலும், இன்று ராஜஸ்தானில் 54,000 இளைஞர்கள் அரசுப் பணிக்கான நியமன ஆணைகளைப் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.





