மேட் இன் இந்தியா சிப்கள் ஆதரவுடன் அடுத்த கட்ட தொழில்நுட்ப மாற்றத்தை இந்திய இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தார். குஜராத் மாநிலம் சனந்தில் செமிகண்டக்டர் தொடர்பான உற்பத்தி தொழிற்சாலையைத் தொடங்கி வைத்து அவர் இதை கூறினார்.
முன்னர் தயாரிப்புப் பொருட்கள் மற்றும் உதிரி பாகங்கள் என்ற நிலைமையில் இருந்த இந்தியா, தற்போது செமிகண்டக்டர்களையும் உற்பத்தி செய்யும் நிலைக்கு வந்துள்ளதாக மோடி கூறினார். முழுமையான மின்னணு மதிப்பு சங்கிலியை உருவாக்கும் திசையில் நாடு நகர்ந்து வருவதாகவும், இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் உள்ளிட்ட அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்கள் வளர்ச்சி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலக தொழில்துறை வரலாற்றில் ஒரு தொழிற்சாலை மட்டும் தொழில்துறை சக்தியை உருவாக்காது; தொழிற்சாலைகளின் தொகுப்புகள் (கிளஸ்டர்கள்) தான் அடித்தளம் என அவர் விளக்கினார். அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு, தைவானின் சின்சு அறிவியல் பூங்கா, ஜப்பானின் சிலிக்கான் தீவு மற்றும் சுகுபா அறிவியல் நகரம் ஆகியவற்றை எடுத்துக்காட்டி, சனந்தும் அதே திசையில் பயணத்தைத் தொடங்கியுள்ளதாக கூறினார்.
மின்னணு உற்பத்தி வளர்ச்சியையும் அவர் சுட்டிக்காட்டினார். மொபைல் போன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா உலகில் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும், 2014-ஐ ஒப்பிடும்போது மின்னணு உற்பத்தி 7 மடங்காகவும், ஏற்றுமதி 11 மடங்காகவும் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
சனந்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையிலிருந்து ஆண்டுக்கு 20 கோடி சிப்கள் தயாரிக்கப்பட உள்ளதாகவும், அடுத்த கட்ட இலக்காக ஆண்டுக்கு 50 கோடி சிப்கள் உற்பத்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் மோடி கூறினார். இந்த இலக்குகளை விரைவில் எட்ட முடியும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.





