ஜூலை 6 அன்று டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். நாட்டின் ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்திற்காக வாழ்வையே அர்ப்பணித்த தலைவராக முகர்ஜியை அவர் வர்ணித்து, அறிவுத்திறன், பொதுச்சேவை, தார்மீக உறுதி ஆகியவற்றின் சங்கமமாக அவரது வாழ்க்கை திகழ்ந்ததாக கூறினார்.

பிரிவினை காலத்தின் சவாலான சூழலில் மேற்கு வங்கம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகத் தொடர வேண்டும் என்பதில் முகர்ஜி உறுதியாக இருந்ததாக மோடி நினைவூட்டினார். அதே உறுதியே பின்னர் ஜம்மு–காஷ்மீர் விவகாரத்தில் அவரை ஈடுபடச் செய்ததாகவும், சிறைவாசம் மற்றும் தனிமை சூழலும் அவரது மன உறுதியை குலைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

சிறைக்காவலில் இருந்தபோதே அவர் திடீரென உயிர் நீத்ததை சுட்டிக்காட்டிய மோடி, தாம் நம்பிய லட்சியத்திற்காகவே அவர் உயிரைத் தியாகம் செய்தார் என ஆச்சார்ய வினோபா பாவே கூறியதை நினைவுபடுத்தினார். 2019ல் அரசியலமைப்பின் 370 மற்றும் 35A பிரிவுகள் ரத்து செய்யப்பட்ட நிகழ்வு, அவரது தியாகத்திற்குச் செலுத்தப்பட்ட உன்னத மரியாதையாக அமைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் வளர்ச்சி குறித்த முகர்ஜியின் பார்வை எவ்வளவு விரிவானது என்பதை, முதல் தொழில் மற்றும் வழங்கல் துறை அமைச்சராக அவர் பணியாற்றிய காலம் வெளிப்படுத்துகிறது என மோடி கூறினார். தாமோதர் பள்ளத்தாக்கு நிறுவனம், சிந்திரி உரத்தொழிற்சாலை, வலுவான தொழில் கொள்கை போன்ற முன்னோடி முயற்சிகள் மூலம் நவீன தொழில் சார்ந்த இந்தியாவின் அடித்தளத்தை அவர் அமைத்ததாகவும், அதே நேரத்தில் பாரம்பரிய வலிமைகள் புறக்கணிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ததாகவும் குறிப்பிட்டார்.

மேலும் 1943ல் மேற்குவங்கத்தில் ஏற்பட்ட கொடிய பஞ்சத்தின் போது உணவகங்கள், நிவாரண மையங்கள் திறக்கப்படுவதற்கு அவர் முன்னெடுத்த முயற்சிகளையும், காலனித்துவ ஆட்சியாளர்களின் உணர்வற்ற செயல்பாட்டை விமர்சித்ததையும் மோடி நினைவுகூர்ந்தார்; இதை வெளிப்படுத்தும் வகையில் முகர்ஜி ‘பஞ்சஷர் மான்வந்தர்’ என்ற நூலை எழுதியதாகவும் கூறினார். 1942ல் மேதினிப்பூரைத் தாக்கிய கடும் புயலுக்குப் பின் இயல்பு நிலையை மீட்டெடுக்க அவர் செய்த பணிகள் பரவலாகப் போற்றப்பட்டதாகவும், வலிமையான, ஒற்றுமையான, தன்னம்பிக்கையான, கருணைமிக்க இந்தியாவை உருவாக்க நாள்தோறும் உழைப்பதே அவருக்குச் செலுத்தும் சிறந்த அஞ்சலி எனவும், இளைஞர்கள் இந்தச் சவாலை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் தெரிவித்தார்.