டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வணக்கம் தெரிவித்து, அவரை தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராகக் குறிப்பிட்டார்.
தன் பதிவில், முகர்ஜியின் வாழ்க்கையை ஆழ்ந்த புலமை, துணிச்சல் மற்றும் தேச சேவையில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவை அடையாளப்படுத்துகின்றன என மோடி கூறினார். இந்தியாவின் ஒற்றுமை, கண்ணியம் மற்றும் முன்னேற்றத்திற்காக அவர் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார் என்றும் தெரிவித்தார்.
முகர்ஜியின் பங்களிப்புகள் பல துறைகளில் பரவியிருந்ததாகச் சுட்டிக்காட்டிய பிரதமர், புதுமை மற்றும் எதிர்கால நோக்குடைய கல்வியை அவர் ஆதரித்ததை நினைவுகூர்ந்தார். அவரை சிறந்த சிந்தனையாளராகவும் கல்வியாளராகவும் அவர் வர்ணித்தார்.
மேலும் தொழில் துறை அமைச்சராக இருந்த போது தொழில் துறையில் தன்னிறைவுக்கான அடித்தளத்தை அவர் அமைத்ததாக மோடி கூறினார். மேற்குவங்க பஞ்சத்தின் போது அவர் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கைகள், துயருற்ற மக்கள்மீது அவர் கொண்ட கருணையை வெளிப்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.
இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் மீதான அவரது உறுதியான அர்ப்பணிப்பு தொடர்ந்து ஊக்கமாக இருப்பதாகக் கூறிய மோடி, வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் முகர்ஜியின் தொலைநோக்கு பார்வை வழிகாட்டுகிறது என தெரிவித்தார்.





