தெலுங்கானாவைச் சேர்ந்த ‘த்வீபா டிபென்ஸ்’ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், ‘உக்ரம்’ என்ற போர் துப்பாக்கியை உள்நாட்டிலேயே 100 நாட்களில் தயாரித்து சாதனை படைத்துள்ளது. இது இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புத் தயாரிப்பில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
ஹைதராபாத் தலைமையகமாக செயல்படும் இந்த நிறுவனம் 2018ல் தொடங்கப்பட்டது. தெலுங்கானா அரசு ஹைதராபாத்தில் ஒதுக்கிய 13 ஏக்கர் நிலத்தில் ஆயுத தயாரிப்பு ஆலையை நிறுவனம் அமைத்துள்ளது.
இந்த துப்பாக்கி, டிஆர்டிஓவின் கீழ் செயல்படும் ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (ARDE) உடன் இணைந்து வடிவமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் மிக வேகமான உள்நாட்டு ஆயுத மேம்பாட்டு முயற்சிகளில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது.
அறிக்கையின்படி, ‘உக்ரம்’ துப்பாக்கி ராணுவத்தின் பொது பணியாளர் தரநிலை (GSQR) தேவைகளுக்கான சோதனைகள், அனைத்து காலநிலைகளிலும் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகள், மேலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வாரிய சோதனைகள் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றுள்ளது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை (ITBP), சஷாஸ்த்ர சீமா பால் (SSB), தேசிய பாதுகாப்பு படை (NSG) உள்ளிட்ட படைகள் இந்த துப்பாக்கியை வாங்குவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆயுதத்தில் நவீன ‘கேஸ்-ஆப்பரேட்டட் ரொட்டேட்டிங் போல்ட்’ அமைப்பு உள்ளது; எடை 4 கிலோவுக்கும் குறைவாகவும், 500 மீட்டர் வரை துல்லியமாக செயல்படக்கூடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





