ராஜ்யசபாவில் தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 123 என்ற எண்ணிக்கையை நோக்கி பா.ஜ. வேகமாக நெருங்கி வருகிறது. 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையில், அந்த ‘மேஜிக்’ எண்ணை எட்ட இன்னும் ஆறு இடங்கள் மட்டுமே தேவைப்படுவதாகவும், ஜூலை 20ல் தொடங்கும் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடருக்கு முன் இது முக்கிய மாற்றமாக பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் ஏப்ரலில் நடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களே இந்த நகர்வுக்கு பின்னணி என குறிப்பிடப்படுகிறது. திரிணமுல் காங்கிரஸில் உட்பிளவு அதிகரித்த சூழலில், அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி.க்களாக இருந்த சுஷ்மிதா தேவ், சுகேந்து சேகர் ராய், பிரகாஷ் பாரைக் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்து பா.ஜ.வில் இணைந்தனர். தொடர்ந்து, காலியாக உள்ள மூன்று மேலவை இடங்களுக்கு பா.ஜ. வேட்பாளர்களாக அவர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இந்த மூவரின் வெற்றி உறுதியானதாக கூறப்படும் நிலையில், அவர்கள் ராஜ்யசபாவுக்கு வந்தவுடன் பா.ஜ.வின் பலம் 117 ஆக உயரும் என தெரிவிக்கப்படுகிறது. இது இதுவரை அக்கட்சி பெற்ற அதிகபட்ச எண்ணிக்கையாகவும், தே.ஜ. கூட்டணியின் மொத்த பலம் 152 ஆக உயரக்கூடும் என்றும் அறிக்கை கூறுகிறது.

மழைக்கால கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது போன்ற அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியலமைப்பு திருத்தங்களுக்கு அவையில் ஆஜராகி வாக்களிக்கும் உறுப்பினர்களில் குறைந்தது மூன்றில் இரு பங்கு ஆதரவு தேவைப்பட்டாலும், குறிப்பிட்ட விவகாரங்களில் பிற கட்சிகளின் ஆதரவைப் பெறுவது அல்லது சில கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகுவது போன்ற சூழ்நிலைகளால் தேவையான எண்ணிக்கையை குறைக்க முடியும் எனவும், இதனால் மசோதாக்களை நிறைவேற்ற அரசுக்கு சாதகமான சூழல் உருவாகலாம் எனவும் குறிப்பிடப்படுகிறது.