உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில், சமாஜ்வாதி கட்சி தலைவர் ஆஸம் கானுடன் தொடர்புடைய முகமது அலி ஜௌஹர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 38 கட்டடங்களை இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வளாகத்தில் உள்ள மொத்த 40 கட்டடங்களில் 38 கட்டடங்கள் முறையான கட்டட அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேச நகர்ப்புற திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுச் சட்டம், 1973-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ராம்பூர் பிராந்திய மேம்பாட்டு ஆணையம் கூறியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, குறிப்பிடப்பட்ட கட்டடங்கள் இடிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை சமாஜ்வாதி கட்சி கடுமையாக விமர்சித்து, இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட பழிவாங்கும் செயல் என குற்றம்சாட்டியுள்ளது. ராம்பூர் மாவட்ட கலெக்டர் அஜய் குமார் திவேதி கூறுகையில், வளாகத்தில் அனுமதியற்ற கட்டுமானங்கள் நடைபெறுவதாக மண்டல இளநிலை பொறியாளர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன என்றார்.
நோட்டீஸ் வழங்கப்பட்ட பின்னர் பல்கலைக்கழகம் தனது பதிலைச் சமர்ப்பித்ததாகவும், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. கட்டுமானங்களுக்கு ஒப்புதல் தேவையில்லை என்றும், அந்தக் கட்டடங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டதால் தற்போதைய விதிகளின் கீழ் அவற்றை சட்டவிரோதம் என அறிவிக்க முடியாது என்றும் பல்கலைக்கழகம் வாதிட்டது.
ஆனால், கட்டுமானம் நடைபெறும் நேரத்தில் தகுந்த அதிகாரியிடமிருந்து ஒப்புதல் பெறுவது கட்டாயம்; அந்தப் பகுதி பின்னர் அதிகார வரம்பிற்குள் வந்ததா இல்லையா என்பது பொருட்டல்ல எனக் கூறி மேம்பாட்டு ஆணையம் அந்த வாதங்களை நிராகரித்தது. 2006ல் தொடங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் சமீப ஆண்டுகளில் நில ஆக்கிரமிப்பு மற்றும் குத்தகை மீறல் தொடர்பான சட்டச் சர்ச்சைகளில் சிக்கியதாகவும், வளாகத்தின் பெரும் பகுதிகளை ஆக்கிரமிப்பு என உறுதி செய்து அரசு மீட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸம் கானும் அவரது குடும்பத்தினரும் பல்கலைக்கழக நிர்வாகக் குழுவிலிருந்து முறைப்படி விலகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





