2027ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் தமிழக மக்கள் அனைவரும் உற்சாகமாக பங்கேற்று, கணக்கெடுப்பு அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தமிழக கவர்னர் ஆர்.என். அர்லேக்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அறிக்கையில், ஆதார அடிப்படையிலான கொள்கை உருவாக்கம், திறமையான ஆளுகை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு தேவையான விரிவான, துல்லியமான, நம்பகமான மக்கள்தொகை, சமூக, பொருளாதார மற்றும் வீட்டுவசதி தரவுகளை உருவாக்கும் முக்கிய தேசிய தரவு சேகரிப்புப் பணியாக இந்த கணக்கெடுப்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறும். சுயவிவரக் கணக்கெடுப்பு ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை நடைபெறும்; அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை வீட்டுப் பட்டியல் பதிவுகள் நடைபெறும்.
இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வரலாற்றில் முதன்முறையாக, பாதுகாப்பான இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் சுயவிவரக் கணக்கெடுப்பை மேற்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இணையவழியில் எளிதாக விவரங்களைப் பூர்த்தி செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த வசதியை முழுமையாகப் பயன்படுத்தி, முழுமையான மற்றும் துல்லியமான தகவல்களை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
சுயவிவரக் கணக்கெடுப்பைத் தேர்வு செய்யாத குடும்பங்கள், ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெறும் வீட்டுப் பட்டியல் கட்டத்தில் கணக்கெடுப்பாளர்களால் கணக்கெடுக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். இதை தேசியப் பொறுப்பாகக் கருதி ஒவ்வொரு குடிமகனும் மனமார பங்கேற்றால், மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்காலத் திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான தரவுத்தளம் வலுப்படும் என்றும் கவர்னர் தெரிவித்தார்.





