வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் கனவு மக்கள் இயக்கமாக மாற வேண்டும்; அதற்கான அடித்தளமாக நாட்டின் இளைஞர்கள் இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
டில்லியில் உள்ள தனது இல்லத்தில் ஊரக வளர்ச்சி, விவசாயம், சமூக நலன் உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் இதை கூறினார்.
நாட்டின் வளர்ச்சி இலக்குகளை அடைய “ஒட்டுமொத்த அரசு” அணுகுமுறை அவசியம் என மோடி வலியுறுத்தினார். சீர்திருத்தங்கள் குடிமக்களின் நலனை மையமாகக் கொண்டு, மக்களின் தேவைகளை அடிப்படையாக வைத்து வடிவமைக்கப்பட வேண்டும்; அவை அர்த்தமுள்ள மாற்றத்தை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார். சீர்திருத்தங்களின் நோக்கம் அரசு செயல்பாட்டை மட்டும் மேம்படுத்துவது அல்ல; இந்தியா வளர்ந்த நாடாக மாறும் பயணத்தை வேகப்படுத்துவதுதான் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசு அமைப்புகள் வேகமான மாற்றங்களை சந்தித்து வரும் நிலையில், நிர்வாக செயல்முறைகளை வலுப்படுத்தி மாறும் சூழலின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். மேலும், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உருவாகும் தேவைகளை விரிவாகப் பட்டியலிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இளைஞர்களிடையே போதைப்பொருள் பிரச்னையை தீவிரமாக கையாள வேண்டும் என்று மோடி குறிப்பிட்டார். இளைஞர்கள் மையமாகக் கொண்ட முன்னெடுப்புகளை துறைகளுக்கு இடையே ஒருங்கிணைக்க வேண்டும் என்றும், விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்காக ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை என்றும் அவர் கூறினார். விளையாட்டு சுற்றுலா கவனம் பெறும் நிலையில், இந்தியாவை உலகளாவிய விளையாட்டு மையமாக நிலைநிறுத்த முக்கியமான சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளை நடத்த முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.





