புதுடில்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.)யைச் சேர்ந்த 47 அதிகாரிகள் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களில் சிலர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

நீட், ஜே.இ.இ. மெயின், கியூட் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட தேசிய அளவிலான தேர்வுகளை என்.டி.ஏ. நடத்தி வருகிறது. நாட்டின் மிகப்பெரிய தேர்வு அமைப்புகளில் ஒன்றாக இருந்தாலும், மருத்துவ நுழைவுத்தேர்வான நீட்டில் வினாத்தாள் கசிவு குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்துவருகின்றன.

கடந்த மே மாதம் நடந்த நீட் இளநிலை தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21ல் மறுதேர்வு நடத்தப்பட்டது. அடுத்தாண்டு முதல் நீட் இளநிலை தேர்வு கணினி வழியில் நடத்தப்படும் என்றும், ஒரு வாரத்துக்குள் தேர்வை நடத்தும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் காரணமாக என்.டி.ஏ.யை முழுமையாக மறுசீரமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே டில்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டங்களில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், பணிநீக்கங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக அல்ல; அமைப்பை அடிப்படையிலிருந்து சீரமைப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இது மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தன. வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு ஆகியவற்றை உயர்த்தி, வினாத்தாள் கசிவைத் தடுக்கும் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.