21ம் நூற்றாண்டின் உலகத்தை இந்திய இளைஞர்கள் தீர்மானிப்பார்கள் என்பது தனது நம்பிக்கை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்தியாவை உணர வேண்டுமெனில் இணையதளங்களை மட்டும் சார்ந்திருக்காமல், இளைஞர்கள் நேரடியாக கிராமங்களுக்கு சென்று அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“வளர்ந்த கிராமம் திட்டம் 2026” திட்டத்தில் பங்கேற்றவர்களுடன் அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் 245 மாவட்டங்களைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டு தங்களின் அனுபவங்களை பிரதமருடன் பகிர்ந்தனர்.
எல்லைப்புற கிராமங்களில் வளர்ச்சிக்கான வேட்கையும் தேசபக்தியும் இணைந்த தனித்துவமான உணர்வு காணப்படுவதாக மோடி கூறினார். அங்கு வாழும் பலர் வசதிகளை விட நாட்டையே முதன்மைப்படுத்தும் மனநிலையுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“மேரா யுவா பாரத்” திட்டத்தின் நோக்கம், நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், லடாக் உள்ளிட்ட இடங்களின் கிராமங்களுக்கு சென்று ஒரு வாரம் போன்ற காலம் தங்கி மக்களின் வாழ்க்கைமுறை, உணவுப் பழக்கங்கள், தொழில், கலாசாரம் மற்றும் வாழ்வியல் நடைமுறைகளை அனுபவித்து சவால்களை புரிந்து கொள்வதுதான் என அவர் விளக்கினார். இது “ஒரே பாரதம், உன்னத பாரதம்” என்ற உணர்வுக்கு சிறந்த உதாரணம் என்றும் அவர் கூறினார்.
வளர்ந்த இந்தியாவின் அடித்தளம் வளர்ச்சி அடைந்த கிராமங்களே என மோடி வலியுறுத்தினார். “வளர்ந்த பாரதம்” பயணத்தின் உந்துசக்தியாகவும் முக்கிய பயனாளிகளாகவும் இளைஞர்கள் இருப்பதாக அவர் கூறினார். கடந்த காலங்களில் பல எல்லைப்புற கிராமங்களில் சாலைகள், மின்சாரம், குடிநீர், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை இருந்தாலும், அங்குள்ள மக்களின் தேசபக்தி ஒருபோதும் குறையவில்லை என்றும் அவர் நினைவூட்டினார்.





