காரைக்குடி: சொத்து வரி நிர்ணயம் செய்து தர ரூ.4,000 லஞ்சம் பெற்றதாக காரைக்குடி மாநகராட்சியின் பில் கலெக்டர் ஒருவர் கையும் களவுமாக பிடிபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் சரவணன் (46). இவர் மாநகராட்சி வார்டு எண் 4, 5 மற்றும் இலுப்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வரி வசூல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். பேயன்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட வீட்டுக்கான சொத்து வரி நிர்ணயம் தொடர்பாக ஒரு பெண் அவரை அணுகியுள்ளார்.
அப்போது ரூ.10,000 லஞ்சம் கேட்டதாகவும், அதில் ரூ.6,000-ஐ அந்த பெண் ஆன்லைன் மூலம் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. மீதமுள்ள ரூ.4,000 கொடுத்தால்தான் வரியை நிர்ணயிக்க முடியும் என அவர் வற்புறுத்தியதாக புகார் தெரிவிக்கிறது.
இதையடுத்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பெண் தகவல் அளித்தார். இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ஜேசுதாஸ் தலைமையிலான குழு திட்டமிட்டு ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பெண் மூலம் வழங்கச் செய்தது. சரவணன் பணத்தை பெற்றபோது மறைந்திருந்த போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
அதிகாரிகள் கூறுகையில், சரவணனிடம் 4 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டதுடன், அவரது வங்கி கணக்குகள் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன. சமீபத்தில் மாநகராட்சி பொறியாளர் அலுவலகத்தில் ஆய்வு நடந்த நிலையில் மீண்டும் லஞ்சப் புகார் எழுந்தது பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.





