ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் ஜூலை 29 அன்று குரு பூர்ணிமா விழா கோலாகலமாக நடைபெற்றது. காலை முதல் இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்தியாவின் பல மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இருந்து வந்த பக்தர்கள் இதில் பங்கேற்றனர்.
விழாவை முன்னிட்டு பிரசாந்தி நிலையம் விழாக்கோலம் பூண்டது. குல்வந்த் அரங்கம் வண்ணமயமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 8 மணிக்கு வேத பாராயணத்துடன் நிகழ்ச்சி தொடங்கியதுடன், 8.20 மணிக்கு பிரசாந்தி பஜன் குழுவினரின் ‘குரு வந்தனம்’ என்ற பக்தி இசை பிரசாதம் நடைபெற்றது.
காலை 9 மணிக்கு ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை டிரஸ்டி எஸ்.எஸ். நாகானந்த் வரவேற்புரையாற்றினார். பகவானின் போதனைகள், பகவத் கீதை மற்றும் வேதங்களிலுள்ள மேற்கோள்களை முன்வைத்து சத்குருவின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். தொடர்ந்து 9.10 மணிக்கு ஸ்ரீ சத்யசாய் சேவா அமைப்பின் அகில இந்திய தலைவர் நிமிஷ் பாண்டியா உரையாற்றி, நாடு தழுவிய ‘பிரேம பிரவாஹினி’ முன்னெடுப்பு குறித்து பேசினார்; நம்பிக்கை, சரணாகதி, ஐயமற்ற கீழ்ப்படிதல் ஆகியவற்றையும் வலியுறுத்தினார்.
கிராமப்புற மக்களுக்கு இலவசமாகவும் தரமான முறையிலும் மருத்துவ சேவையை அவர்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் நோக்கில், புதிதாக வடிவமைக்கப்பட்ட ‘ஸ்ரீ சத்ய சாய் நடமாடும் மருத்துவமனை’ தொடக்க விழாவும் காலை நடைபெற்றது. இதை அறிமுகப்படுத்திய டாக்டர் கே. நரசிம்மன் (இயக்குநர்) மருத்துவ வசதிகளைப் பெற இயலாதவர்களையும் சென்றடையும் வகையில் இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
350க்கும் மேற்பட்ட தன்னார்வ மருத்துவர்களின் பங்களிப்புடன் செயல்படும் இந்த நடமாடும் மருத்துவமனை, அவ்வப்போது முகாம்கள் நடத்துவதோடு மட்டுமல்லாமல் தினமும் கிராமங்களுக்கு சென்று சேவையாற்றி, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியலையும் ஆன்மிகத்தையும் ஒருங்கிணைத்து வருகிறது என அவர் விளக்கினார். கிராமங்களிலேயே பரிசோதனைகள் செய்யவும், உள்ளமைந்த மருந்தகத்தின் மூலம் உடனடியாக மருந்துகள் வழங்கவும் ஏற்பாடு இருப்பதாகவும் தெரிவித்தார். பின்னர் தெய்வீக சொற்பொழிவு, பஜனை மற்றும் மங்கள ஆரத்தி நடைபெற்றது.





