இந்தியாவில் ஹைட்ரஜன் ரயில்கள் தடம் பதிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதன் பின்னணியில் முக்கியமான ஒரு தேவையான பாதுகாப்பான ஹைட்ரஜன் சேமிப்பு தொழில்நுட்பத்தில் ஒரு இந்திய ஸ்டார்ட்-அப் கவனம் செலுத்தி வருகிறது.
ஹைட்ரஜனை பாதுகாப்பாக சேமித்து தூரத்திற்கு எடுத்துச் செல்ல பயன்படும் உயர் அழுத்த கலப்பு சேமிப்புச் சிலிண்டர்களுக்காக இந்தியா நீண்ட காலமாக வெளிநாடுகளை அதிகம் நம்பியிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிக செலவு, நீண்ட காத்திருப்பு மற்றும் சிக்கலான லாஜிஸ்டிக்ஸ் பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சவாலுக்கு தீர்வாக, அஜித் பாபு மற்றும் வோரா இணைந்து 2022-ல் ‘குட்லைப் மொபிலிட்டி’ நிறுவனத்தை தொடங்கினர். 700-பார் அழுத்தத்தைத் தாங்கும் டைப் IV மற்றும் டைப் V சிலிண்டர்களை நிறுவனம் உருவாக்கி வருவதாகவும், இது காப்புரிமை பெற்ற அதிநவீன தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வாகவும் நிறுவனம் முன்வைக்கிறது.
இது இறக்குமதி சுமையை குறைப்பதோடு, இந்தியாவின் ‘தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்திற்கு’ துணை நிற்கும் முயற்சியாகவும் குறிப்பிடப்படுகிறது. மேலும் ஹைட்ரஜன் வாகனங்கள், ட்ரோன்கள் மற்றும் விண்வெளி தேவைகளுக்கான உள்நாட்டு திறனை வலுப்படுத்தும் வகையிலும் இந்த தயாரிப்புகள் பயன்படும் என கூறப்படுகிறது.
சிலிண்டர்களுக்கு அப்பால், பேட்டரி அனலிட்டிக்ஸ் மற்றும் லித்தியம்–ஹைட்ரஜன் இணைந்த ஹைபிரிட் ஆற்றல் அமைப்புகள் போன்ற துறைகளிலும் நிறுவனம் பணியாற்றுகிறது. ‘ஸ்டார்ட்-அப் மகாகும்ப் 2025’ விருது, ‘பாரத் இன்னோவேட்ஸ் 2026’ சர்வதேச அங்கீகாரம் உள்ளிட்ட பாராட்டுகளும், கம்மின்ஸ் இந்தியா உள்ளிட்ட அமைப்புகளின் நிதி ஆதரவும் கிடைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.




