ஜப்பானில் சில நாட்களுக்கு முன் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பெரும் சேதமும் உயிரிழப்பும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ள நிலையில், பல ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடிந்த கட்டடங்களின் குவியல்கள் பல இடங்களில் காணப்படுகின்றன. அவற்றை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். வீடுகளை இழந்தவர்கள் பாதுகாப்புக்காக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குமாமாட்டோ மாகாணத்தில் நிலைமை கடுமையாக இருப்பதாக கூறப்படுகிறது. பலரின் வீடுகள் முற்றிலும் இடிந்துள்ளதுடன், கடும் வெப்பத்திலும் அடிப்படை வசதிகள் குறைவிலும் மக்கள் தவித்து வருகின்றனர்.

சுமார் 46,000 வீடுகளுக்கு இன்னும் தண்ணீர் வழங்கப்படவில்லை என்றும், எரிபொருள் பற்றாக்குறையும் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.