புதுடில்லி

போராட்டங்களை கையாளும் போது சட்ட அமலாக்க அமைப்புகள் மிகுந்த நிதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும், உடனடி முன்னுரிமை அமைதியைப் பேணுவதாக இருக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

டில்லியில் நடந்த போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி” உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் (நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா) விசாரணைக்கு வந்தபோது இந்தக் கருத்துகள் பதிவானது. ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி மனீஷ் குமார் சோலங்கி மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிஸ்வான் அகமது, போராட்டம் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆனபோதும் பேரணியை ஏற்பாடு செய்தவர்களுக்கான பொறுப்புக்கூறல் நிர்ணயிக்கப்படவில்லை என்றும், அதிகாரிகள் மீது கல் எறிந்ததாகக் கூறப்படும் நபர்கள் சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பக்கூடாது என்றும் வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள், இத்தகைய சூழ்நிலைகளில் ஆக்ரோஷமான பதிலடி அளிப்பதைத் தவிர்த்து, போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கி அமைதிப்படுத்த வேண்டும் என்றனர். அமைதியான பேரணியை ஊக்குவித்து, ஏதேனும் சம்பவம் ஏற்பட்டால் நிலைமை கைமீறாமல் கவனமாக கையாள வேண்டும் என்றும் அமர்வு வலியுறுத்தியது.