புதுடில்லி: எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டாலும், பார்லிமென்டில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக பார்லி. விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, கூச்சல் மற்றும் குழப்பம் காரணமாக அவையில் விவாதங்கள் குறைந்துள்ளன; இதனால் அவை ஒத்திவைக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

ராஜ்யசபாவில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் விவாதங்களில் பங்கேற்றதாகவும், சிறப்பு அமர்வு நடத்த வேண்டும் என்ற எந்த முன்மொழிவும் இல்லை என்றும் ரிஜிஜூ தெரிவித்தார். ஏற்கனவே ஒரு கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் சிறப்பு அமர்வு குறித்து விவாதிப்பது சாத்தியமில்லை என்றும் அவர் கூறினார்.

இடையூறுகளுக்கிடையிலும் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். அவை செயல்பாட்டில் குழப்பம் ஏற்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு முக்கிய பிரச்னைகள் எனக் கூறிய ரிஜிஜூ, பெண்களின் நியாயமான பிரதிநிதித்துவத்தை காங்கிரஸ் எதிர்க்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.