தெரு மற்றும் சாலை பெயர்களில் இடம்பெற்றுள்ள ஜாதி பெயர்களை அகற்றுவதற்கான அரசு உத்தரவுகள், நீதிமன்ற உத்தரவுகள் நடைமுறையில் அமல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் தாக்கல் செய்த ஜாமின் மனு, நீதிபதி என். ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது இந்தக் கருத்து முன்வைக்கப்பட்டது. வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் (எப்.ஐ.ஆர்) கூட தெரு பெயரில் ஜாதி குறிப்பு இடம்பெற்றிருப்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார்.

1978-ஆம் ஆண்டிலேயே தெரு, சாலை பெயர்களில் உள்ள ஜாதி பெயர்களை நீக்க அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், இதுகுறித்து நீதிமன்ற உத்தரவுகளும் உள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டார். இருப்பினும் பல இடங்களில் இன்னும் தெரு பெயர்களில் ஜாதி பெயர்கள் தொடர்வதாக நீதிமன்றம் தெரிவித்தது.

ஆதிதிராவிடர் நலத்துறை ‘சமூக நீதித் துறை’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுத் தெரு மற்றும் சாலை பெயர்களில் உள்ள ஜாதி குறிப்புகளை நீக்கும் உத்தரவுகள் அமல்படுவதை உறுதி செய்ய இது சரியான நேரம் எனவும் நீதிபதி கூறினார்.

மேலும், தெரு பெயர்களில் உள்ள ஜாதி பெயர்களை நீக்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்ற பதிவுத் துறை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, தலைமை நீதிபதி முன் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.