புதுடில்லி: நடப்பு 2025-26 எத்தனால் வினியோக ஆண்டில், நாட்டின் ஒட்டுமொத்த எத்தனால் வினியோகம் 800 கோடி லிட்டரை கடந்துள்ளதாக, அனைத்து அகில இந்திய வடிகட்டுதல் நிறுவனங்கள் சங்கம் (AIDA) வெளியிட்ட புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த சங்கத்தின் தகவலின்படி, ஜூலை மாதத்தில் மட்டும் 93 கோடி லிட்டருக்கும் மேல் எத்தனால் வினியோகிக்கப்பட்டுள்ளது. இதில் 71 கோடி லிட்டர் தானிய அடிப்படையிலான மூலப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட எத்தனால் ஆகும்.
ஜூன் மாதத்தில் மொத்த வினியோகம் 103 கோடி லிட்டராக இருந்த நிலையில், அதில் 75 கோடி லிட்டர் தானிய அடிப்படையிலான எத்தனால் ஆக இருந்தது. இதன் காரணமாக, மொத்த வினியோகத்தில் தானிய அடிப்படையிலான எத்தனாலின் பங்கு ஜூனில் 73% இருந்து ஜூலையில் 76% ஆக உயர்ந்துள்ளது.
ஜூலை மாத தானிய அடிப்படையிலான உற்பத்தியில் மக்காச்சோளம் மற்றும் இந்திய உணவு கழகத்தின் (FCI) உபரி தானியங்கள் தலா 30 கோடி லிட்டர் அளவுக்கு பங்களித்துள்ளன. சேதமடைந்த உணவு தானியங்கள் மூலம் 11 கோடி லிட்டர் எத்தனால் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரும்பு மூலப்பொருட்களில் இருந்து ஜூலையில் 22 கோடி லிட்டர் எத்தனால் வினியோகிக்கப்பட்டது; இது ஜூன் மாதத்தின் 28 கோடி லிட்டரை விட குறைவாகும். 800 கோடி லிட்டர் என்ற அளவை எட்டியது திட்டத்தின் முக்கிய மைல்கல்லாகும் என்றும், உருவாக்கப்பட்டுள்ள உற்பத்தி திறனை முழுமையாக பயன்படுத்த அதிக கலப்பு, ப்ளெக்ஸ்-பியூயல் வாகனங்கள் மற்றும் எத்தனால் பயன்பாட்டை விரிவுபடுத்துவது உதவும் என்றும் AIDA துணை தலைமை இயக்குநர் பாரதி பாலாஜி கூறினார்.





