உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெறும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ இடம்பெறும் என நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி வெளியிடப்பட்டதாக கூறப்படும் ஒரு சுற்றறிக்கையில், நிகழ்ச்சி நிரல் ‘வந்தே மாதரம்’ பாடல்/இசை, அதன் பின்னர் தேசியக்கொடி ஏற்றுதல், இறுதியில் தேசிய கீதம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ இடம்பெறாதது குறித்து மதுரைக் கிளை வழக்கறிஞர்கள் சங்கம் (எம்.எம்.பி.ஏ.,) கவலை தெரிவித்தது.

பதிவாளர் ஜெனரலுக்கு எழுதிய கடிதத்தில், சங்க பொதுச் செயலாளர் ஜெசிஜீவபிரியா, உயர்நீதிமன்ற நிகழ்ச்சிகள் நீண்டகால மரபின்படி ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடப்பட்டு அல்லது இசைக்கப்பட்ட பின்னரே தொடங்குவது வழக்கம் என்றும், அது தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு பெருமையின் அடையாளம் என்றும் குறிப்பிட்டு, சுதந்திர தின விழாவிலும் அதை சேர்க்க வேண்டுமென வலியுறுத்தினார்.

இதையடுத்து, பல்வேறு வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகள் நிர்வாக நீதிபதி சி.வி.கார்த்திகேயனை சந்தித்து கோரிக்கையை முன்வைத்ததாக எம்.எம்.பி.ஏ., தலைவர் அருள்வடிவேல் (எ) சேகர் தெரிவித்தார். விழா மேடையில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடப்படும் என அவர் உறுதியளித்ததாகவும் கூறினார்.

மேலும், முதல்வர் கொடியேற்றும் நிகழ்வில் மாநில அரசு பின்பற்றும் நடைமுறையை உறுதிப்படுத்துமாறு அரசு தலைமை வழக்கறிஞருக்கு தலைமை நீதிபதி ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளதாகவும், அதே நடைமுறை உயர்நீதிமன்ற விழாவிலும் பின்பற்றப்படும் என நிர்வாக நீதிபதி தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.