அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடுவது தொடர்பான நெறிமுறையை காங்கிரஸ் புறக்கணிப்பதாகக் கூறி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையாக விமர்சித்தார். இதை சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அவமதிப்பாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழகப் பயணத்தின் போது செங்கல்பட்டில் நிருபர்களிடம் பேசிய அமித் ஷா, 1937ஆம் ஆண்டு முஸ்லிம்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் ‘வந்தே மாதரம்’ பாடலை இரண்டு பகுதிகளாகப் பிரித்ததாகவும், அதுவே நாட்டுப் பிரிவினைக்கு அடித்தளமிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் தேசியப் பாடலின் முதல் இரண்டு பத்திகள் மட்டுமே பாடப்படும் என காங்கிரஸ் செயற்குழு முடிவு செய்து, 1937ஆம் ஆண்டின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

‘வந்தே மாதரம்’ 150வது ஆண்டு விழாவின்போது முழுப் பாடலையும் பாடி தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தி, பிரதமர் நரேந்திர மோடி “வரலாற்றுப் பிழையை” சரிசெய்ய முயன்றதாக அமித் ஷா தெரிவித்தார். அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் முழுப் பாடலையும் பாட வேண்டும் என அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதை காங்கிரஸ் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் ‘வந்தே மாதரம்’ முழக்கத்தை எழுப்பிய பலர் ஆண்டுகள் சிறையில் கழித்ததாக நினைவூட்டிய அமித் ஷா, பார்லிமென்ட் சட்டத்தை நிராகரிக்கும் போக்குடன், ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் மீண்டும் “திருப்திப்படுத்தும் அரசியல்” பாதைக்கு திரும்பியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.