டெல்லி போலீஸ் நிலையத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி புதிய ‘நாடகம்’ அரங்கேற்றியதாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா குற்றம்சாட்டினார். இதன் மூலம் மக்களின் கவனத்தை திசைதிருப்ப முயன்றதாகவும் அவர் கூறினார்.

ராகுலின் “மலிவான, கவனத்தை ஈர்க்கும் அரசியல்” மீண்டும் வெளிப்பட்டுள்ளதாக நட்டா விமர்சித்தார். இன்றைய போராட்டம் மாணவர்களுக்காகவோ அல்லது நீதிக்காகவோ அல்ல; காங்கிரசின் அரசியல் விரக்தியையும் ஊடக கவனத்தை ஈர்க்கும் முயற்சியையும் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டம் தொடர்பான விவகாரத்தில் முன்னாள் நீதிபதி தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளதாக நட்டா குறிப்பிட்டார். அந்த வழக்கு நீதிமன்றத்தில் பரிசீலனையில் இருக்கும் நிலையில், போலீஸ் நிலையம் வெளியே கேமராக்களுக்கு முன்பு அமர்ந்து ராகுல் எதை நிரூபிக்க விரும்புகிறார் என கேள்வி எழுப்பிய அவர், எதிர்க்கட்சித் தலைவருக்கு நீதித்துறையில் நம்பிக்கை இல்லையா என்றும் கேட்டார்.

மேலும், ‘வந்தே மாதரம்’ விவகாரம் காரணமாக காங்கிரஸ் நாடு முழுவதும் கடும் விமர்சனங்களை சந்தித்து வருவதாகவும், அந்தப் பாடலுக்கு காட்டப்பட்டதாக கூறப்படும் அவமதிப்பை மக்கள் கேள்வி எழுப்புவதாகவும் நட்டா கூறினார். மூவர்ணக் கொடி வடிவில் கேக்கை காங்கிரஸ் தலைவர் வெட்டியதாக கூறி, அந்த அவமானத்திலிருந்து கவனம் திருப்பவே ராகுல் இவ்வாறு நடந்துகொண்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.