வாஷிங்டன்: அமெரிக்காவின் தேசியப் பொதுக்கடன் ரூ.3,840 லட்சம் கோடியைத் தாண்டி புதிய சாதனையைத் தொட்டுள்ளதாக, அமெரிக்க கருவூலத்துறை வெளியிட்ட தினசரி நிதி அறிக்கை தெரிவிக்கிறது.

வர்த்தகம் முடியும் நேரத்தில் அரசு நிதிநிலை தொடர்பான நாள்தோறும் புதுப்பிப்பு அறிக்கையை கருவூலத்துறை வெளியிடுவது வழக்கம். ஆகஸ்ட் 18 அன்று வெளியான அறிக்கையில், கடன் தொகை வரலாற்றில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருப்பது வெளிப்பட்டது.

முன்னதாக, நிதி மற்றும் பொருளாதாரத் தகவல்களை வழங்கும் காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகம் (CBO), 2026 நிதியாண்டு முடிவில் அமெரிக்கக் கடன் ரூ.3,773 லட்சம் கோடியாக உயரும் என கணித்திருந்தது. ஆனால் எட்டு மாதங்களிலேயே அந்த கணிப்பைத் தாண்டி, தற்போது ரூ.3,840 லட்சம் கோடியை மீறியுள்ளது.

மேற்காசியாவில் நிலவும் போர்ச்சூழல், ராணுவச் செலவுகள் அதிகரிப்பு, சமூகப் பாதுகாப்புக்கான நிதி உயர்வு, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டதால் கடன் மீதான வட்டி செலவு பலமடங்கு அதிகரித்தது ஆகியவை காரணங்களாக இருக்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

தேர்தல் காலத்தில் பொதுச் செலவினங்களை குறைப்பதாக உறுதியளித்த அதிபர் டொனால்டு டிரம்ப், நாட்டை மேலும் கடனில் தள்ளிவிட்டதாகவும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.