கட்சியின் நிகழ்ச்சிகளில் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளை மட்டும் பாடுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்த முடிவு அரசியல் அரங்கில் விவாதங்களையும் விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது.
இதற்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முழுப் பாடலை பாடாமல் இரண்டு பத்திகள் மட்டும் பாடுவது நாட்டுக்கு செய்யும் பெரிய அவமரியாதை என்றும், இது குறுகிய ஓட்டு வங்கி நலன்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு என்றும் பாஜ குற்றம்சாட்டியது.
இந்த பின்னணியில், தலைநகர் டெல்லியில் பாஜ தலைமையகத்தில் புதியதாக நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. தேசிய தலைவர் நிதின் நபின் தலைமையில் நடந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில், வந்தே மாதரம் மரபையும் அதன் தேசிய உணர்வையும் சமகால தேர்தல் கணக்குகளுக்குள் சுருக்கிவிட முடியாது என்ற தீர்மானம் முக்கியமாக இடம்பெற்றது. பாஜ வெளியிட்ட அறிக்கையில், வந்தே மாதரம் தேசிய உணர்வின் அழியாத சின்னம் என்றும், சுதந்திரப் போராட்டத்தின் மந்திரம் என்றும் கூறப்பட்டது; அதற்கு சட்டப்பூர்வ அந்தஸ்தை உறுதிப்படுத்தும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், மதவாதம் அல்லது குறுகிய ஓட்டு வங்கி நலன்களுக்காக தேசிய பாடலை பின்னுக்கு தள்ளும் எந்த முயற்சியையும் பாஜ நிராகரிப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





