புதுடில்லி: இந்தியாவின் ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் சேதமடைந்த பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டமைக்க பாகிஸ்தான் நிதியுதவி வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலில், பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் நிதி, பயிற்சி, ஆட்சேர்ப்பு உள்ளிட்ட உதவிகளை வழங்குகிறது என்ற இந்தியாவின் குற்றச்சாட்டுகள் மீண்டும் குறிப்பிடப்படுகின்றன. அதே நேரத்தில், தங்களுக்கு தொடர்பில்லை என பாகிஸ்தான் மறுத்தாலும், அங்கு பயங்கரவாதிகள் வெளிப்படையாக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை தொடங்கியது. இதில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதாகவும், பல முகாம்கள் கடுமையாக சேதமடைந்ததாகவும் தகவல் கூறுகிறது.

தற்போது அந்த முகாம்களை ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு சீரமைத்து வருவதாகவும், பயங்கரவாத அமைப்புகளை மீண்டும் புத்துயிர் பெறச் செய்ய பாகிஸ்தான் 25 கோடி ரூபாய் (அந்நாட்டு ரூபாய் மதிப்பில்) நிதி ஒதுக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் முகாம்கள் புனரமைப்புக்காக மட்டும் 11 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குடியிருப்புகள் மற்றும் பயிற்சி தளங்கள் புதுப்பிப்பு பணிகள் கனரக இயந்திரங்கள் மூலம் நடைபெறுவதாகவும், அதற்கான புகைப்படங்கள் வெளியாகியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது.