தென் தமிழக மாவட்டங்களில் கிரிப்டோ கரன்சி முதலீடு என்ற பெயரில் நடந்ததாக கூறப்படும் மோசடி தொடர்பாக 13 வங்கி கணக்குகளை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு (EOW) போலீசார் முடக்கினர்.

விசாரணை அதிகாரிகள் கூறுகையில், “எப்.கியூ.எல். இன்ஸ்வெஸ்ட்மென்ட் டிரேடிங்”, “எப்.கியூ.எல். எக்ஸ்சேஞ்ச் ஆப்” மற்றும் “வி.ஜி. இன்ஸ்வெட்மென்ட் குரூப் சிண்டிகேட்” போன்ற பெயர்களில் செயலிகள் மூலம் முதலீட்டாளர்கள் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்தனர். முதலீடு செய்த பணம் 45 நாளில் இரட்டிப்பாகும் என்ற வாக்குறுதி முன்வைக்கப்பட்டதாகவும் கூறினர்.

கடந்த ஏழு மாதங்களில் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 40,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மோசடி தொகை ரூ.400 கோடிக்கு மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பணத்தை மீட்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறினர்.

மேலும், மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட செயலிகளை உருவாக்குவதில் வெளிநாட்டு நபர்கள் தொடர்புடைய சதி இருக்கலாம் என்ற தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.