இழப்பீடு கோரியதாக வெளியான தகவல்களுக்கு விளக்கம்

எந்த நாட்டிடமும் நேரடியாக காலநிலை நிதி இழப்பீடு கோரவில்லை என்று நேபாளம் தெரிவித்துள்ளது. காத்மாண்டுவில் வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கனால் இதைத் தெளிவுபடுத்தினார்.

சமீபத்திய பெருவெள்ளத்தில் பெரும் சேதம் ஏற்பட்ட நிலையில், இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் நேபாளம் காலநிலை தொடர்பான பேரிடர் இழப்பீடு கேட்டதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அந்த தகவல்களை அமைச்சர் திட்டவட்டமாக மறுத்தார்.

தானோ அல்லது வெளியுறவு அமைச்சகமோ எந்த நாட்டிடமும் இழப்பீடு தொடர்பாக கோரிக்கை வைத்ததில்லை என்றும், இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாடுகளிடமும் நேரடியாக இழப்பீடு கேட்டதில்லை என்றும் அவர் கூறினார்.

இதற்குப் பதிலாக, இந்த பேரிடரை காலநிலை மாற்றத்தின் தாக்கங்களின் கோணத்தில் அனைவரும் பார்க்க வேண்டும் என்றும், உலக நாடுகள் கூட்டு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஒவ்வொரு பேரிடரின்போதும் அதிகரிக்கும் வெப்பநிலை உள்ளிட்ட காலநிலை மாற்றத்தின் விளைவுகளை சிந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், காலநிலை சவால்களை எதிர்கொள்ளும் சூழலில் தங்களின் நாகரிகம், கலாசாரம், எதிர்காலம் ஆகியவற்றை பாதுகாக்க பிற நாடுகளுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.